×

அட்சய திருதியை நாளான நேற்று தமிழகம் முழுவதும் 18 டன் தங்கம் விற்பனை.. 2019ம் ஆண்டை விட 30% கூடுதல் விற்பனை!!

சென்னை: அட்சய திருதியை நாளான நேற்று தமிழகம் முழுவதும் 18 டன் தங்கம் விற்பனையாகி உள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அட்சய திருதியை நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அட்சயா என்ற சொல்லுக்கு எப்போதும் குறையாது என்று பொருள் கூறப்படுகிறது. இந்த நாள், வெற்றியையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தரும் நாளாக நம்பப்படுகிறது. எனவே, இந்த நாளில் தங்கம், வெள்ளி, வீட்டு மனைகள், நவரத்தின கற்கள் போன்றவற்றை வாங்குவது, முதலீடு செய்வது சிறப்பு என்று மக்கள் கருதுகின்றனர்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது, புதிய பொருட்கள் வாங்குவது சிறப்பு என்றாலும், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நகைகளை வாங்க மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் அட்சய திருதியை நாளான நேற்று, நாடு முழுவதும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து நகை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். சிலர் ஒரு கிராம் காசாவது வாங்கிச் சென்றனர். சிலர் நகைச்சீட்டு திட்டத்தில் சேர்ந்து, நகை வாங்குவதற்கான முதல் படியை நேற்று எடுத்து வைத்தனர்.

இதனால் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 18 டன் தங்கத்தை மக்கள் வாங்கி குவித்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டை விட 30% கூடுதல் விற்பனை என தங்க நகை விற்பனையாளர்கள் சங்கத்தினர் கூறுகின்றனர்.சாதாரணமாக தினசரி 7 முதல் 8 டன் வரையில் தங்கம் விற்பனையாகும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதத்தை விட ஒப்பிடும் போது, இம்மாதம் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன் காரணமாகவும் விற்பனை அதிகரித்துள்ளது. 


Tags : Tamil Nadu ,Atsaya Thirathi , Atchaya Thiruthi, Tamil Nadu, Gold, Sale
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...